4768.

தடக்கைநால் - ஐந்து பத்துத்
     தலைகளும்உடையான் தானே
அடக்கிஐம்புலன்கள் வென்ற
     தவப்பயன்அறுத லோடும்,
கெடக்குறி ஆக,மாகம்
     கிழக்குஎழுவழக்கு நீங்கி,
வடக்கு எழுந்துஇலங்கை செல்லும்
     பிரிதிவானவனும் ஒத்தான்.
 

     நால்ஐந்துதடக்கை -இருபது பெரிய கரங்களையும்; பத்துத்
தலைகளும்
 - பத்துத் தலைகளையும்; உடையான் - உடைய இராவணன்;
ஐம்புலன்கள் - ஐந்து  புலன்களையும்; தானே அடக்கி - பிறர் உதவியின்றி
ஒன்றியாக இருந்து ஒடுக்கி; வென்ற தவப்பயன் - வெற்றி கொண்ட தவத்தின்
பயனான புண்ணியம்; அறுதலோடும் - அற்றுத் தீர்ந்தவுடன்; கெடக்குறி
ஆக
- உற்பாதமாக; மாகம் - வானத்தில்; கிழக்கு எழு வழக்கு நீ்ங்கி-
கீ்ழ்த்திசையில் உதித்தலாகிய இயல்பிலிருந்து விலகி; வடக்கு எழுந்து -
வடக்குத் திசையில் உதித்து; இலங்கை செல்லும் - இலங்கை நோக்கிப்
போகும்; பிரிதி வானவனும் ஒத்தான் - சூரிய பகவானை ஒத்திருந்தான்.;

     தவப்பயன் -புண்ணியம். கெடக்குறி - ஒரு சொல். கெடலூழ்
என்பதுபோல. (பெருங்கதை 25-168) கெட - கெட்டுப் போக; குறி -
அடையாளமாய் என்றும் கூறலாம்.                            (28)