4770. | கேழ்உலாம் முழு நிலாவின் கிளர்ஒளிஇருளைக்கீற, பாழி மா மேரு நாண, விசும்புஉறப் படர்ந்த தோளான், ஆழி சூழ் உலகம்எல்லாம் அருங் கனல்முருங்க உண்ணும் ஊழி நாள்,வடபால் தோன்றும் உவா முழுமதியும் ஒத்தான்.* |
கேழ் உலாம் முழுநிலாவின் கிளர்ஒளி - எல்லா இடத்திலும் ஒளிபரப்பும் பூரண சந்திரிகையைப் போன்று கிளர்ச்சிபெற்ற (அனுமனின்) ஒளியானது; இருளைக் கீற - இருளைப் போக்கவும்; பாழி மா மேரு நாண -பருத்த மேருமலை நாணம் அடையவும்; விசும்பு உறப் படர்ந்த தோளான் -ஆகாயம் அளாவும் தோளையுடைய அனுமான்; ஆழிசூழ் உலகம் எல்லாம் முருங்க - கடலால் சூழப்பெற்ற எல்லா உலகங்களும் அழிய; அருங்கனல் உண்ணும் ஊழி நாள் - நெருப்பு விழுங்கும் ஊழிக் காலத்தில்; வடபால் தோன்றும் உவாமுழு மதியம் ஒத்தான் - வடதிசையில் உதிக்கும் பௌர்ணமிக் காலத்து முழு மதியையும் ஒத்திருந்தான். அனுமன்ஊழிக்காலத்தில் வடக்குத் திக்கில் உதிக்கும் முழுமதி போன்றிருந்தான். கேழ் - நிறம் (இங்கே வெண்மை ஒளி) மேரு, அனுமனுக்கு உவமை. நிலவு என்றது சந்திரிகையை - சந்திரனையன்று. சந்திரன் போன்றஒளியுடையவன். சந்திரன் போன்றிருந்தான் என்பது சிறப்பன்று. (30) |