4777.

'ஓசனை உலப்பு இலாத
     உடம்புஅமைந்துடைய' என்னத்
தேசமும் நூலும்சொல்லும்
     திமிங்கிலகிலங்களோடும்
ஆசையை உற்றவேலை
     கலங்க,அன்று அண்ணல் யாக்கை
வீசிய காலின்வீந்து
     மிதந்தன,மீன்கள் எல்லாம்.*

     உலப்பிலாதஉடம்பு - அழிவற்ற உடலானது; ஓசனை அமைந்து
உடைய என்ன
- ஒரு யோசனை தூரம் பெற்றுள்ளது என்று; தேசமும்
நூலும் சொல்லும்
- உலக மக்களும் புராணங்களும் கூறுகின்ற;
திமிங்கிலகிலங்களோடும் - திமிங்கில கிலம் என்னும் கடற் பிராணியுடன்;
ஆசையை உற்ற வேலை - திக்குகளை அளவிய கடல்கள்; கலங்க -
கலக்கம் அடைய; அன்று - கடலைத் தாண்டிய தினத்தில்; அண்ணல்
யாக்கை வீசிய காலின்
- அனுமன் திருமேனியானது உந்தித் தள்ளிய
காற்றினாலே; மீன்கள் எல்லாம் - கடல் மீன்கள் யாவும்; வீந்து மிதந்தன -
இறந்து மிதந்தன.

     அனுமன் வேகமாகச்சென்றதனால் உண்டான காற்றால் கடலும்
திமிங்கல கிலங்களும் கலங்கின. மீன்கள் இறந்தன. திமிங்கிலத்தை உண்ணும்
பிராணியைத் திமிங்கில கிலம் என்பர். கிலம் - அழிவு.              (37)