4781. | நூல்ஏந்துகேள்வி நுகரார், புலன் நோக்கல்உற்றார் போல், ஏந்திநின்ற தனியாள் மெய் பொறாது நீங்க, கால் ஆழ்ந்துஅழுந்திக் கடல்புக்குழி, கச்சம்ஆகி, மால்ஏந்த ஓங்குநெடுமந்தர வெற்புமான.* |
நூல் ஏந்துகேள்வி நுகரார் - நூல்களால் கூறப்பெறும்அறிவை உட்கொள்ளாமல்; புலன் நோக்கல் உற்றார்போல் - புலன்வழியே சென்று உலகைப் பார்ப்பவரைப் போன்று; ஏந்தி நின்ற தனியாள் மெய் பொறாது நீங்க - ஏந்தி நின்ற ஒப்பற்ற நிலமகள் மேனி பொறாமல் விலகிச் செல்ல (அதனாலே); கால் ஆழ்ந்து அழுந்தி - அடிப்பாகம் கீழே சென்று முழுகி; கடல் புக்குழி - கடலில் புகுந்த இடத்தில்; கச்சம் ஆகி - ஆமை வடிவம் கொண்டு; மால்ஏந்த ஓங்கும் - திருமால் ஏந்துவதால் கடலுக்கு மேல் வந்த; நெடுமந்தர வெற்பு மான - பெரிய மந்தரமலையை ஒப்ப, புலன்வழிச்சென்றவர் போல் ஆண்மை நீங்க, அதனால் கடலில் அழுந்தும்போது ஆமை உருக்கொண்ட திருமாலால் தாங்கப்பெற மேல்வந்த மந்தரமலை போல மைநாகமலை மேலே வந்தது. கச்சம் - ஆமை. (41) |