4790.

கொடு நாலொடு இரண்டு குலப்பகை
     குற்றம்மூன்றும்
சுடுஞானம்வெளிப்பட உய்ந்த
     துய்க்கு இலார்போல்
விடநாகம்முழைத்தலை விம்மல்
     உழந்து,வீங்கி,
நெடுநாள்,பொறைஉற்ற உயிர்ப்பு
     நிமிர்ந்துநிற்ப.*
 

     நாலொடு இரண்டுகொடும் குலப்பகை - ஆறு வகையான கொடிய
பரம்பரையாக வரும் பகையையும்; குற்றம் மூன்றும் - மூன்று குற்றத்தையும்;
சுடுஞானம் - அழிக்கின்ற ஞானமானது; வெளிப்பட - ஆன்மாவிலே
தோன்ற; உய்ந்த துய்க்கு இலார்போல் - தப்பிப் பிழைத்த பற்றற்ற
ஞானிகளைப் போல; முழைத்தலை நெடுநாள் விம்மல் உழந்து -  மலைக்
குகைகளில் நீண்ட நாட்கள் பொருமி வருந்தி;  வீங்கி பொறையுற்ற - உடல்
பருத்து அடங்கிக் கிடந்த; விடநாகம் - விடப் பாம்புகள்; உயிர்ப்பு நிமிர்ந்துநிற்ப - பெருமூச்சு  வெளிப்பட்டு நிலைக்க;

     மலையின்குகையில் அகப்பட்ட பாம்புகள் ஆறு வகையான
பகையையும் மூன்று குற்றமும் நீங்கிய ஞானிகளைப் போல விடுதலை பெற்று
உயிர்த்தன. பகை ஆறு - காமம், வெகுளி, கடும்பற்றுள்ளம், மானம், உவகை,
மதம் என்பவை. முக்குற்றம்  - ஐயம், திரிபு, அறியாமை.
 தனம், குலம்,
கல்விஎன்று குற்றம் மூன்று என்று பழைய உரை பேசும். வஞ்ச
முக்குறும்பு - என்று இராமானுச நூற்றந்தாதி பேசும்.               (50)