4791.

எழுந்துஓங்கி விண்ணொடு மண் ஒக்க,
     இலங்கும்ஆடி
உழுந்து ஓடுகாலத்திடை, உம்பரின்
     உம்பர்ஓங்கிக்
கொழுந்துஓடிநின்ற கொழுங்குன்றை
     வியந்துநோக்கி,
அழுங்கா மனத்துஅண்ணல் 'இது என்கொல்'
     எனாஅயிர்த்தான்.

     அழுங்கா மனத்துஅண்ணல் - போகங்களில் தாழாதசோர்வு
இல்லாத உள்ளத்தையுடைய அனுமன்; இலங்கும் ஆடி - விளங்குகின்ற
கண்ணாடியின்கண்; உழுந்து ஓடுகாலத்திடை - உழுந்தானது ஒருமுறை
உருள்வதற்குள்; எழுந்து ஓங்கி -கடலிலிருந்து மேலே எழுந்து; விண்ணொடு
மண்ஒக்க -
ஆகாயமும் பூமியும் ஒன்றாகும்படி; உம்பரின் உம்பர் ஓங்கி -
மேலும் மேலும் வளர்ந்து பரவி; கொழுந்து ஓடி நின்ற - மலைச் சிகரங்கள்
வளர்ந்த; கொழுங்குன்றை - மைந்நாக மலையை; வியந்து நோக்கி -
ஆச்சரியத்துடன் பார்த்து; இது என்கொல் எனா அயிர்த்தான் -
இப்பொருள் யாதோ என்று ஐயம் உற்றான்.

     மைந்நாகமலை,கண்ணாடியில் உழுந்து ஒருமுறை சுழல்வதற்குள்
எழுந்தது கண்டு அனுமன் இது யாதோ என்று அதிசயப்பட்டான். ஓடுதல் -
சுழலுதல். ஓடுவளை திருத்தியும் என்னும் முல்லைப் பாட்டுக்கு (82) சுழலுகின்ற
வளையைச் சுழலாமல் செறித்தும் என்றும் உரை கண்டனர். சம்பந்தப் பிரான்,
'எழிற்கண்ணாடி உழுந்துருளும் அளவையின் ஒளி எரி கொள வெஞ்சிலை
வளைத்தோன்' என்பர். (ஏரிசையும் - முதல் திருமுறை)             (51)