4802. 

செவ்வான்கதிரும் குளிர்திங்களும்
     தேவர்வைகும்
வெவ்வேறுவிமானமும் மீனொடு
     மேகம்மற்றும்

எவ்வாய்உலகத்தவும் ஈண்டி
     இருந்ததம்மின்
ஒவ்வாதன ஒத்திடஊழிவெங்
     காலும் ஒத்தான்.*

(அனுமன் சென்றவிரைவால்)

     செவ்வான்கதிரும் - சிவந்த வானத்துச் சூரியனும்; குளிர் திங்களும்
-
குளிர்ந்த சந்திரனும்; தேவர் வைகும் வெவ்வேறு விமானமும் -
தேவர்கள் தங்கியிருக்கின்ற பல்வேறு வகைப்பட்ட விமானங்களும்; மீனொடு
மேகம் மற்றும் -
நட்சத்திரங்களும் மேகமும் மற்றைய பொருள்களும்;
எவ்வாய் உலகத்தவும் - எந்த இடங்களில் உள்ள உலகத்தைச் சார்ந்த
பொருள்களும்; ஈண்டி இருந்த - ஒன்றாகச் சேர்ந்திருந்தன; தம்மில்
ஒவ்வாதன ஒத்திட -
தமக்குள்ளே ஒத்துப் போகாதவை ஒத்துப்
போகும்படியிருந்தமையால் (அனுமன்); ஊழி வெங்காலும் ஒத்தான் -
பிரளயகாலத்துக் காற்றுப் போன்று இருந்தான்.

    வேறு வேறு வகையானபொருள்கள் அனுமனின் வேகத்தால் ஒன்று
சேர்ந்தன. ஆதலால் அவன் ஊழிக்காலத்தை ஒத்திருந்தான்.

     ஈண்டியிருத்தலாவதுஓரிடத்தில் கூடியிருத்தல். முன் சூரியனுக்கோரிடம்,
சந்திரனுக்கோரிடம் மற்றைக் கிரகங்களுக்கு வெவ்வேறிடம். இப்போது எல்லாம்
ஓரிடத்தைச் சேர்தலாயின அனுமன் செல்லும் வேகத்தால் என்க, என்று
திரிசிரபுரம் மகாவித்துவான் வி.கோவிந்த பிள்ளை எழுதிய விளக்கம் இங்கே
நினைவு கூரத் தகும். ஈண்டியிரிந்த என்னும் பாடத்திற்கு சூரியன் முதலானவை
ஒன்று சேர்ந்து விலகின என்பது பொருள்.                       (62)