| 4807. | தீயேஎனல்ஆய பசிப்பிணி தீர்த்தல்செய்தாய் ஆயே விரைவுற்றெனை அண்மினை வண்மை யாள! நீயே இனிவந்துஎன் நிணம்கொள் பிணங்குஎயிற்றின் வாயே புகுவாய்; வழிமற்றிலை வானின் என்றாள். |
(சுரசை அனுமனைநோக்கி) வண்மையாள! -கொடைப் பண்புடையவனே; தீயே எனல் ஆய - நெருப்பே என்று கூறத்தக்க; பசிப்பிணி - பசியாகிய நோயை; தீர்த்தல் செய்வாய் ஆயே - நீக்குதலைச் செய்பவனாக ஆகி; விரைவுற்று எனை அண்மினை - விரைவாக என்னைச் சார்ந்தாய்; இனி - இப்போது; நீயே வந்து - நீயாக வந்து; என் நிணங்கொள் பிணங்கு - எனது கொழுப்பைக் கொண்ட ஒன்றோடொன்று பினனியிருக்கும்; எயிற்றின் வாயே - கோரைப் பற்களையுடைய வாயிலே; புகுவாய் -நுழைவாயாக; வானின் - ஆகாயத்தின்கண்; மாற்றுவழி இலை - வேறு வழியில்லை என்று; என்றாள் - கூறினாள். நீ என்னுடையபசிப்பிணி தீர்க்க வந்துள்ளாய். வண்மையுடையவனே நீயே என் வாய்ப்பக்கம் வருக என்று சுரசை கூறினாள். பிணங்கு எயிற்றில் - ஒன்றோடொன்று பின்னிய பற்கள். எயிறு - வளைந்த பற்கள் என்றே உரை கூறப்பெற்றது. நான்தான் உண்பேன் - நான்தான் உண்பேன் என்று தம்முள் பிணங்கும் எயிறு என்று கூறினும் அமையும். (67) |