இலங்கைமாநகர வருணனை

                         கலிவிருத்தம்

 4835.

பொன்கொண்டு இழைத்த? மணியைக் கொடு பொதிந்த?
மின்கொண்டுஅமைத்த ? வெயிலைக்கொடு சமைத்த?

என்கொண்டுஇயற்றிய எனத்தெரிவு இலாத-
வன்கொண்டல்விட்டுமதி முட்டுவன மாடம்.

     வன்கொண்டல்விட்டு - வலிமையான மேகமண்டலத்தைப் பின்னே
தள்ளிவிட்டு; மதிமுட்டுவன மாடம் - சந்திர மண்டலத்தை மோதுவனவான
மாடிவீடுகள்; பொன்கொண்டு இழைத்த ? - பொன்னைக் கொண்டு செய்யப்
பெற்றனவா (அதன்மேல்); மணியைக் கொடு பொதிந்த ? -மாணிக்கங்களைக் கொண்டு மூடப்பெற்றனவா ?; மின்கொண்டு அமைத்த?
-
மின்னலைக் கொண்டு அமைக்கப் பெற்றனவா (அதன்மேல்); வெயிலைக்
கொடு சமைத்த ? -
(சூரியனின்) வெயிலைக் கொண்டு முலாம் பூசப்
பெற்றனவா; என்கொண்டு இயற்றிய - எந்தப் பொருளைக் கொண்டு
இயற்றப்பெற்றன; எனத் தெரிவு இலாத - என்று ஆராய்ச்சி செய்ய
முடியாதபடி உள்ளன.

     மணியைக் கொண்டுபொதித்த என்று கூறப்பெற்றதால் அதற்கேற்ப
வெயிலைக்  கொண்டு பொதிந்த என்பதற்கு வெயிலைக் கொண்டு முலாம்
பூசப் பெற்றது என்று கூறப்பெற்றது. மாடம் - உப்பரிகை அமைந்த வீடு.
கொண்டல், மதி என்பவை ஆகுபெயராக அந்த அந்த மண்டலத்தை
உணர்த்தின. இப்பாடல் முதல் 136வரை அனுமனின் எண்ண ஓட்டம். கவியின்
மொழியன்று.                                               (1)