4844.

தேவர்என்பவர் யாரும் இத்திரு நகர்க்கு இறைவற்கு
ஏவல் செய்பவர்,செய்கிலாதவர் எவர் என்னின்,
மூவர் தம்முளும்ஒருவன் அங்கு உழையனா முயலும் !
தாவில் மாதவம்அல்லது பிறிதொன்று தகுமோ ?

     திருநகர்க்குஇறைவற்கு - இந்த இலங்கைஅரசனுக்கு; தேவர்
என்பவர் யாரும் -
தேவர் என்று சொல்லப்படுபவர் அனைவரும்; ஏவல்
செய்பவர் -
அடிமைப் பணி புரிவோர்; (ஏவல்) செய்கிலாதவர் எவர்
என்னின் -
(அவனுக்கு) பணிபுரியாதவர் எவர் என்றால்; மூவர் தம்முளும் -
மும்மூர்த்திகளில்; ஒருவன் - ஒருவனாகிய பிரமதேவன்; அங்கு - அந்த
இலங்கையில்; உழையனா முயலும் - பணிசெய்பவனாக முயல்கின்றான்; தா
இல் மாதவம் அல்லது -
குற்றமற்ற பெருந்தவம் அல்லது; பிறிது ஒன்று
தகுமோ -
வேறு ஒன்று செய்தற்குத் தகுதியுடையது ஆகுமோ.

     உழையன் -அருகிருப்போன்; ஏவல்கூவல் செய்பவன். தேவரும்
பிரமதேவனும் ஏவலர்  ஆனது  மாட்சியால்  என்பதால்  தவத்தால்
எதையும்  பெறலாம்  என்பது விளங்கும். தவமே செய்யத்தக்கது என்பதாம்.
                                                      (10)