தவத்தை வியந்தது | 4854. | நீரும் வையமும் நெருப்பும் மேல்நிமிர் நெடுங்காலும் வாரி வானமும்வழங்கல ஆகும். தம் வளர்ச்சி ஊரின் இந்நெடுங்கோபுரத்து உயர்ச்சிகண்டு உணர்ந்தால் மேரு எங்ஙனம்விளர்க்குமோ, முழுமுற்றும் வெள்கி ? |
ஊரின் - இந்த இலங்கைமாநகரின்; இ - இந்த; நெடுங்கோபுரத்து -நீண்ட கோபுரத்தினுடைய; உயர்ச்சி கண்டு உணர்ந்தால் - வளர்ச்சியைப் பார்த்து அறிந்தால்; (அறிஞர்களால்) நீரும் வையமும் நெருப்பும் - தண்ணீரும் மண்ணும் தீயும்; மேல்நிமிர் - மேல்நோக்கி வீசும்; நெடுங்காலும் - பெருங்காற்றும் என்று கூறப்பெற்ற பூதங்களின்; வாரிவானமும் - பெரும்பரப்பையுடைய ஆகாயமும்; தம் வளர்ச்சி - சிறப்புக்கள்; வழங்கல ஆகும் - கொண்டாடப்படாமல் போகும்; (இதையறிந்தால்) மேரு- மகாமேரு மலையானது; முழுமுற்றும் வெள்கி - (தன்னுடைய) உடல் முழுவதும் நாணத்தால் சுருங்கி; எங்ஙனம் விளர்க்குமோ - எப்படி வெளுத்துப் போகுமோ. வையம் -பிருதிவி (மண்) வழங்குதல் - கொண்டாடப்படுதல். 'வழங்கு தாரவன்' என்னும் தேவரின் தொடருக்கு நச்சர் உலகம் கொண்டாடப்படுதலின் வழங்குதாரவன் என்றார், என விளக்கினார். (சிந்-2504) அவற்றின் வளர்ச்சி வழக்கு வீழ்ந்தனவாகும் என்றும் கூறலாம். (20) |