4857. 

கறங்குகால்புகா; கதிரவன் ஒளிபுகா; மறலி
மறம் புகாது; இனிவானவர் புகார் என்கை வம்பே !
திறம்புகாலத்துள் யாவையும் சிதையினும், சிதையா
அறம் புகாது,இந்தஅணி மதிள் கிடக்கை நின்று
                                 அகத்தின் !*

     இந்த - ; அணி -அழகிய;மதிள் கிடக்கை நின்று - மதிளின்
பரப்பிலிருந்து; அகத்தின் - இலங்கைக்குள்ளே; கறங்கு கால் புகா - சுழன்று
வீசும் காற்றுகள் நுழையா; கதிரவன் ஒளி புகா - சூரியனின் வெப்பக்கதிர்கள்
நுழையா; மறலி மறம் புகாது - யமனுடைய கொலைத்தொழில் நுழையாது;
இனி - இனிமேல்; வானவர் புகார் என்கை - தேவர்கள் (போர் செய்ய
எண்ணி) நுழையார் என்று கூறுதல்; வம்பே - வீண் மொழியாகும்; திறம்பு
காலத்துள் -
(பொருள்யாவும் மாறுபடும்) ஊழிக்காலத்தில்; யாவையும்
சிதையினும் -
எல்லாம் அழிந்தாலும்; சிதையா - விகாரம் அடையாத; அறம்
-
அறக்கடவுள்; புகாது - நுழையாது. 

     மறம் - கொலைத்தொழில். மறம் திருந்தான் என்னும் கலிக்கு (குறிஞ்சி
2) கொலைத் தொழில் குறைவின்றித்திருந்திய கானவர் என்றார் நச்சர்.
கிடக்கை - பரப்பு.

     முருக அமர் பூமுரண் கிடக்கை - (பட்டினப் - 37) நச் - உரை
புகுதல்என்பது நுழைதல் என்னும் சாதாரணப் பொருள் தராமல் போர்
செய்யப்புகுதல் என்னும் பொருள் தந்தது. மேற்செலவு என்பது படை
எடுப்பதைக்குறித்தலைப் போல.                                (23)