4862. | பொன்னின் மால்வரைமேல் மணி பொழிந்தன பொருவ உன்னி,நான்முகத்து ஒருவன் நின்று ஊழ்முறை உரைப்ப பன்னி, நாள்பலபணிஉழந்து, அரிதினில் படைத்தான்- சொன்ன வானவர்தச்சனாம்,இந்நகர் துதிப்பான். |
நான்முகத்துஒருவன் - நான்கு முகங்களைப் பெற்ற பிரம்மதேவன்; பொன்னின் மால்வரைமேல் - பெரிய பொன்மயமான மேருமலைபோல்; மணி பொழிந்தன பொருவ - மாணிக்கத்தைச் சொரிவன ஒப்ப; பன்னி - (தேவதச்சனைப்) புகழ்ந்து; நின்றுஉன்னி - உறுதியுடன் ஆராய்ந்து; ஊழ்முறைஉரைப்ப - நகர் அமைய வேண்டிய முறையைக் கூற; சொன்ன வானவர்தச்சன் - பிரம்மனால் சொல்லப்பெற்ற தேவதச்சன்; பலநாள் - பலநாட்கள்; பணி உழந்து - வருந்திப் பணியை மேற்கொண்டு; இந்நகர் - இந்த இலங்கை மாநகரை; துதிப்பான் - உலகம் கொண்டாடும்படி; அரிதினில்படைத்தான் - அருமையாகச் சிருட்டித்தான். நன்கு பணிசெய்யும் பொருட்டுப் பணியாளனைப் புகழ்வது சால்பென்க. சொர்ணாபிஷேகம் என்னும் வழக்கை நோக்கவும். பொன்னின் மலைமேல் மணி பொழிந்தாற்போலத் தேவதச்சன், இந்நகரைப் படைத்தான் என்று பொருள் கூறப்பெற்றது. (28) |