4863. | மகரவீணையின் மந்தர கீதத்து மறைந்த, சகர வேலையின்ஆர்கலி; திசைமுகம் தடவும் சிகர மாளிகைத்தலம்தொறும் தெரிவையர் தீற்றும் அகரு தூமத்தின்அழுந்தின முகிற்குலம் அனைத்தும். |
மகர வீணையின் -மகரவடிவாய் அமைந்த வீணையில் தோன்றிய; மந்தர கீதத்து - மென்மையான கீதத்தினாலே; சகரவேலையின் - சகரரால் தோண்டப்பெற்ற கடலினுடைய; ஆர்கலி மறைந்த - பேரொலி மறைந்துவிட்டன; திசை முகம் தடவும் - நான்கு திசைகளையும் தடவுகின்ற; சிகரம் - விமானங்களைப் பெற்ற; மாளிகைத் தலம் தொறும் - மாளிகையின்இடங்கள் தோறும்; தெரிவையர் தீற்றும் - பெண்கள் புகைக்கின்ற; அகருதூமத்தின் - அகிலின் புகைப்பரப்பில்; முகில் குலம் அனைத்தும் - எல்லாமேகக் கூட்டங்களும்; அழுந்தின - மறைந்து விட்டன. மந்தரகீதத்தில் கடல்ஒலி அடங்கிவிட்டன. அகிற்புகையில் மேகங்கள் மறைந்தன. மந்தரம் - மெல்லோசையாற் பாடுதல் 'மந்தரம், மத்திமம், தாரம் இவை மூன்றில் (கல்லாடம் 21-50) மந்தரம் - படுத்தல். இசை கேட்டுக் கடல் அமைதி பெற்றது. ஏழுகடலும் இடை துளும்பா (பெரிய புரா - ஆனாயர் - 35) இ்ப்பாடலில் இசையின் அமைதியும் புகையின் மிகுதியும் பேசப்பட்டது. (29) |