4864.

பளிக்கு மாளிகைத் தலம்தொறும்,
     இடம்தொறும், பசுந்தேன்
துளிக்கும் கற்பகத் தண்நறுஞ்
     சோலைகள்தோறும்,
அளிக்கும்தேறலுண்டு ஆடுநர்
     பாடுநர்ஆகிக்
களிக்கின்றார் அலால் கவல்கின்றார்
     ஒருவரைக்காணேன்.

     பளிக்குமாளிகைத் தலந்தொறும் - பளிங்கால்அமைக்கப்பெற்ற
மாளிகைகளின் உப்பரிகை தோறும்; இடந்தொறும் பசுந்தேன் துளிக்கும் -
எல்லா இடங்களிலும் தேனைத்துளிக்கின்ற; தண்நறும் - குளிர்ந்த நறுமணம்
வீசும்; கற்பகச் சோலைகள் தோறும் - கற்பக மரங்கள் நிரம்பிய சோலைகள்
தோறும்; அளிக்கும் - பணியாட்கள் வழங்கும்; தேறல் உண்டு - கள்ளைப்
பருகி; ஆடுநர் பாடுநர் ஆகி - (மயக்கத்தால்) ஆடுபவர்களாகவும்
பாடுபவர்களாகவும் இயல்பு திரிந்து; களிக்கின்றார் அலால் - செருக்குக்
கொள்பவரைத் தவிர; கவல்கின்றார் ஒருவரை - கவலைப்படுகி்ன்ற ஒரு
மனிதரை; காணேன் - (யான்) காணவில்லை.

    கவல்கின்றார்என்பது பிராட்டியைக் குறிப்பதாக வலிந்து பொருள்
கூறுவாரும் உளர். இடந்தொறும் ஆடுநர் பாடுநர் என்றும் கூறலாம். ஏற்பின்
கொள்க. இ்ங்கு அது கற்பகமரத்துக்கு அடைமொழியாகப் பேசப் பெற்றது.
இடந்தொறும் தேன் துளிக்கும் கற்பகம் என்க.                    (30)