4866. | எறித்தகுங்குமத்து இளமுலை எழுதியதொய்யில், கறுத்த மேனியில்பொலிந்தன; ஊடலில்கனன்று, மறித்தநோக்கியர் மலர்அடி மஞ்சுளப்பஞ்சி, குறித்தகோலங்கள் பொலிந்தில; அரக்கர்தம் குஞ்சி. |
இளமுலை - (அரக்கியர்களின்) இளமையான முலையின் கண்ணே; எறித்த குங்குமத்து - (சிவந்த) ஒளியை வீசுகின்ற குங்குமக் குழம்பால்; எழுதிய தொய்யில் - எழுதப் பெற்ற வரிக் கோலங்கள்; கறுத்த மேனியில் - (அரக்கர்களின்) கரிய மேனியில்; பொலிந்தன - விளக்கமாகத் தெரிந்தன; ஊடலில் - ஊடற்பிணக்கத்தாலே; கனன்று - சீற்றங் கொண்டு; மறித்த நோக்கியர் - மாறுபாடு பெற்ற விழிகளைப் பெற்ற அரக்கியர்களின்; மலரடி - (தாமரை) மலர்போன்ற பாதத்தில்; மஞ்சுளப் பஞ்சி - செம்பஞ்சுக் குழம்பாலே; குறித்த கோலங்கள் - எழுதிய கோலங்கள்; அரக்கர் குஞ்சி - அரக்கர்களின் தலைமயிரின்கண்; பொலிந்தில - விளங்கித் தோன்றவில்லை. அரக்கர்களின்கரியநிறமும் அவர்களின் தலைமயிரின் சிவந்த நிறமும் பேசப்பட்டது. தொய்யில் -மகளிரின் மார்பில் அணியப் பெறும் வரிக்கோலம். இது கொடிவடிவாகவும், கரும்பு வடிவாகவும் எழுதப்பெறும். (32) |