இலங்கையில் இருள்பரவுதல்

                         கலிவிருத்தம்

4877.

ஏய்வினைஇறுதியில் செல்வம் எய்தினான்
ஆய்வினை மனத்துஇலான், அறிஞர் சொற்கொளான்
வீவினைநினைக்கிலான், ஒருவன் மெய்இலான்
தீவினை என இருள்செறிந்தது எங்குமே.

     ஏய் வினை -தகுதியுடையதவமுயற்சியால்; இறுதியில் - அழிவற்ற;
செல்வம் எய்தினான் - செல்வத்தை அடைந்தவனும்; மனத்து -
உள்ளத்தில்;ஆய்வினை இலான் - ஆராய்வதைப் பெற்றிராதவனும்; அறிஞர்
-
அறிஞர்களின்; சொல் கொளான் - அறிவுரையை மதியாதவனும்; வீவினை
நினைக்கிலான் -
தனக்கு வரும் மரணத்தை நினையாதவனும்; மெய்இலான்
-
சத்தியப் பற்றில்லாதவனும் (ஆகிய); ஒருவன் - ஒரு மனிதனுடைய;
தீவினை என - தீச்செயல்கள் போல; எங்கும் - எல்லா இடத்திலும்; இருள்
செறிந்தது -
இருளானது அடர்ந்து பரவிற்று.

     முயற்சியால்செல்வம் பெற்று முறை பிறழ்ந்தவனின் தீச்செயல் போல்
இருள் செறிந்தது. ஏய்வினை - முயற்சி. வினைக்கண் வினையுடையான் (குறள்
519) இங்குள்ள வினைக்கு நல்வினை என்றும் தீவினை என்றும் கூறப்
பெற்றமை நன்றெனில் கொள்க. தவ முயற்சியால் பொருள் பெற்றவன்
இராவணன் ஆதலின் வேறு கூறற்க. இராவணன் குறிப்பாற் பேசப்படுகிறான்.

    விளம் - விளம்- மா - கூவிளம் என்னும் சீர்களை இவ் விருத்தம்
பெற்றுவரும். அமரர் கம்பன் அடிப்பொடி அவர்கள் இராமாவதாரத்தில் 2173
பாடல்கள் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். (மணிமலர் 76)           (43)