4883. | பொன்னகர்மடந்தையர், விஞ்சைப் பூவையர் பன்னகவனிதையர், இயக்கர் பாவையர், முன்னின பணிமுறைமாறி முந்துவார், மின்இனம்மிடைந்தென விசும்பின் மீச்செல்வார். |
பொன் நகர்மடந்தையர் - தேவலோக மகளிர்களும்;விஞ்சைப் பூவையர் - வித்தியாதரப் பெண்களும்; பன்னக வனிதையர் - நாக கன்னியர்களும்; இயக்கர் பாவையர் - யட்ச மங்கையர்களும்; முன்னின பணி - (தாங்கள்) ஏற்றுக்கொண்டு செய்து முடித்த வேலையானது; முறைமாறி - கிரமப்படி மாறுகின்ற காரணத்தால்; முந்துவார் - விரைபவராய்; விசும்பின் - ஆகாயத்திலே; மின்இனம்மிடைந்தென - மின்னல்கூட்டம் நெருங்குவது போல்; மீச்செல்வார் - மேலே போவார்கள். பணி செய்துமுற்றிய மகளிர்கள் தம் பணியைப் பிறர்பால் ஒப்படைத்துவிட்டு விண்ணில் செல்வது மின்னற்கூட்டம் நெருங்குவது போல் உள்ளது. முந்துவார் - முந்தி, முற்றெச்சமாகக் கொள்ளப்பட்டது. முறை மாறுதல் - தம்பணியைப் பிறர்பால் ஒப்படைத்தல். சிலம்பில் மாதரி, 'நெய் முறை நமக்கு இன்று' என்று கூறியதைக் கருதுக. இவர்கள் பகற்பணியாளர்கள். பகற்பணிக்கு மகளிரும் இரவுப் பணிக்கு ஆடவரும் அமைந்தனர் போலும். (49) |