4889.

தெரிந்துஒளிர் திங்கள் வெண்குடத்தினால், திரை
முரிந்து உயர்பாற்கடல் முகந்து, மூரிவான்
சொரிந்ததேஆம்என துள்ளும் மீனொடும்,
விரிந்தது;வெண்நிலா மேலும் கீழுமே.

     மூரிவான் -பெரியஆகாயம்; தெரிந்து - உலகுக்கு நன்மை செய்ய
எண்ணி; ஒளிர் - ஒளிவீசுகின்ற; திங்கள் வெண்குடத்தினால்
-
சந்திரனாகியகுடத்தினாலே; திரை முரிந்து உயர் - அலைகள் மடங்கி
மடங்கி எழுகின்ற; பாற்கடல் முகந்து - பாற்கடலையே முகந் தெடுத்து;
சொரிந்ததே என - கொட்டியது என்று கூறும்படி; வெண்நிலா -
வெண்மையான நிலாவெளிச்சம்; மேலும் கீழும் - மலைப்புறத்திலும்,
தரைப்புறத்திலும்; துள்ளும் - துள்ளுகின்ற;  மீனொடும் விரிந்தது -
நட்சத்திரங்களுடன் பரவிற்று.

     ஆகாயம் உலகுக்குநன்மை செய்ய எண்ணிப் பாற்கடலையே
முகந்தெடுத்துப் பொழிந்தாற் போல நிலாவின் வெளிச்சம் எங்கும் பரவிற்று
(கம்ப.549)

    மூரிவான் -எழுவாய்; சொரிந்தது - பயனிலை. ஆம், ஏ, அசைகள் (55)