4898. | தெவ் அளவுஇலாத; இறை தேறல் அரிது அம்மா ! அவ்வளவு அகன்றதுஅரண், அண்டம் இடையாக எவ் அளவின்உண்டு வெளி ! ஈறும், அது ! என்னா, வெவ்வள அரக்கனைமனக்கொள வியந்தான். |
தெவ் - இராவணன் கவர்ந்தபொருள்கள்; அளவு இலாத - அளவற்றுள்ளன; இறை தேறல் - (அதுபற்றி) சிறிய அளவு தெளிதலும்; அரிது - மி்கக் கடினம்; அரண் - (அப்பொருள் குவித்துள்ள) கோட்டையானது; வெளி - ஆகாயம்; அண்டம் இடை ஆக - அண்டங்கள் தங்குவதற்கு இடமாக; எவ் அளவின் உண்டு - எந்த அளவுக்கு இருக்கிறதோ; அவ்அளவு - அந்த அளவுக்கு; அகன்றது - பரந்திருக்கிறது; ஈறும் - கோட்டையின் உயர்வும்; அது - அந்த ஆகாயம் போன்றது; என்னா - என்று கருதி; வெவ்வள அரக்கனை - கொடுஞ்செல்வம் பெற்ற இராவணனை; மனக்கொள - மனம் கொள்ளும்படி; வியந்தான் - அதிசயித்தான். இடை - இடம்.தெவ்வுதல் - கொள்ளையடித்தல் அது - அதுபோன்றதே. (திருக்குறள் நுண்மாலை) மணங்கொள என்பது மணக்கொள என வந்தது வழி எதுகை நயங்கருதினான் போலும். (64) |