4914. | சிந்துஆரத்தின் செச்சை அணிந்தாள்;தெளிநூல் யாழ் அம்தா ரத்தின்நேர்வரு சொல்லாள்; அறைதும்பி கந்தா ரத்தின்இன்இசை பன்னிக் களிகூரும் மந்தா ரத்தின்மாலை அலம்பும் மகுடத்தாள். |
சிந்து ஆரத்தின்- கடலில்தோன்றிய முத்துக்களால் ஆன; செச்சை அணிந்தாள் - சட்டை தரித்தவளும்; நூல் தெளி - நூல்களால் சிறந்தது என்று முடிவு பண்ணிய; யாழ் - யாழின்கண் தோன்றிய; அம்தாரத்தின் - அழகிய 'தாரம்' என்னும் சுரத்தை; நேர் வரு சொல்லாள் - ஒத்திருக்கும் சொல்லையுடையவளும்; அறை தும்பி - தேனுண்டு இசைபாடும் வண்டுக்கூட்டங்கள்; இன் - இனிய; கந்தாரத்து இசை - காந்தாரம் என்னும் பண்ணை; பன்னி - (பண்ணி) பாடி; களிகூரும் - மகி்ழ்ச்சியடையும்; மந்தாரத்தின் - மந்தார மலர்களால் கட்டப்பெற்ற; மாலை அலம்பும் - மாலை அசைகின்ற; மகுடத்தாள் - கீரிடத்தை அணிந்தவளும். இன் இசை பண்ணி- இனிய இசையைப் பாடி மாலை மருதம் பண்ணி, காலை --'செவ்வழி பண்ணி' என்றும் (புறம் 149) 'யாழோர் மருதம் பண்ண' என்றும் (மதுரைக் 658) பெருக வந்த வழக்கு அருகின. பன்னி - என்று மாற்றப் பெற்றது. ஒரு ஏடு (25) பண்ணி என்னும் பாடத்தை வழங்கிற்று, வாழ்க. இப்பாடலின்பின்னிரண்டு அடிகளோடு சீவகசிந்தாமணியுள் "மந்தார மாலை மலர் வேய்ந்து தீந்தேன், கந்தாரஞ் செய்து களிவண்டு முரன்று பாட (சிந்.1959) என்னும் அடிகளையும் களிவண்டு மந்தார மாலையின் மலரை மொய்த்து அதிற்றேனை உண்டு மகிழ்ந்து காந்தாரம் என்னும் பண்ணையாக்கி ஆளாபனஞ் செய்து பாடும்படி"என வரும் உரைப் பகுதியையும் ஒப்பிடுக. (அண் - பல்கலை - கழ - பதிப்பு) அமைவண்டு -பெரும்பான்மையான பாடம், அமை -அழகு. (80) |