4915.

எல்லாம்உட்கும் ஆழி இலங்கை இகல்மூதூர்
நல்லாள்;அவ்ஊர் வைகுஉறை ஒக்கும் நயனத்தாள்;
'நில்லாய்! நில்லாய்!' என்று உரை நேரா
                             நினையாமுன்
வல்லேசென்றாள்; மாருதி கண்டான்; வருகஎன்றான்.

     எல்லாம் உட்கும்- எல்லாஉயிர்க் கூட்டங்களும் பயப்படும்படியான;
ஆழி இலங்கை -
கடலாற் சூழப்பெற்ற இலங்கையாகிய பழமையான ஊர்க்கு;
இகல் மூதூர் நல்லாள் -
வலிமை மிக்க நன்மை செய்பவளும்; அ ஊர்
வைகும் -
அந்த இலங்கை தங்கும்; உறை ஒக்கும் நயனத்தாள் - உறை
போன்ற கண்களையுடையவளும் ஆகிய இலங்கை மாதேவி; (அனுமனை
நோக்கி) நில்லாய் நில்லாய் - நில், நில்; என்று உரை நேரா - என்று
முழங்கி; நினையா முன் - (எதிரே வருவார் யார் என்று அனுமன்)
எண்ணுவதற்கு முன்னே; வல்லே சென்றாள் - வேகமாக (அனுமன் முன்)
போனாள்; கண்டான் மாருதி - அதைக் கண்ட அனுமன்; வருக என்றான் -
வருவாயாக என்று கூறினான்.

     ஆழி - கடற்கரை.ஆழி கடல் அரையா - சுந்தரர். பெருங்கடற்கு
ஆழியனையன் (புறம் 330). சான்றாண்மைக்கு ஆழி எனப்படுபவர் (குறள் 989)
அழகர் உரை.                                          (81)