அனுமனும் இலங்கைத்தேவியும் உரையாடுதல்

4917.

களியா உள்ளத்து அண்ணல் மனத்தில் கதம்மூள
விளியா நின்றே,நீதி நலத்தின் வினை ஓர்வான்,
'அளியால் இவ்ஊர் காணும் நலத்தால்
                            அணைகின்றேன்;
எளியேன்உற்றால் யாவது உனக்கு இங்கு இழவு ?'
                             என்றான்.

     நீதி - நீதியுடன்ஒன்றுபட்ட; நலத்தின் வினை - நன்மையின் பயனை;
ஓர்வான் -
 அறிந்தவனும்; களியா -  செருக்கடையாத; உள்ளத்து
அண்ணல் -
உள்ளத்தைப் பெற்றவனுமான அனுமன்; மனத்தில் கதம்மூள -
கோபத்தீ மூண்டு எரிய; விளியா நின்று - (அதனை) அழித்து (இலங்கைத்
தேவியைப் பார்த்து);  இ ஊர் - இந்த ஊரை; நலத்தால் - இந்நகரின்
அழகால்; காணும் அளியால் - காணவேண்டும் என்னும் ஆசையால்;
அணைகின்றேன் -
அடைந்துள்ளேன்; எளியேன் - பலமில்லாத யான்;
இங்கு உற்றால் -
இவ்விடத்தை அடைந்தால்; உனக்கு இழவு யாது -
உனக்கு நேரும் நட்டம் யாது; என்றான் - என்று அமைதியாகப் பேசினான்.

     இவ்வூர், நீதிநலத்தின் வினை ஓர்வான் - அணைகின்றேன் என்று ஒரு
தொடராக்கி இந்த ஊரின் நீதியையும் அழகையும் ஆராய வந்துள்ளேன் என்று
உரை கூறுவதும் நன்றே.

      நலத்தால் -இன்பத்துடன் - நல் எண்ணத்தால் (அண். பல்கலை பதிப்பு)                                                 (83)