| 4947. | நலன்உறுகணவர் தம்மை நவைஉறப்பிரிந்து, விம்மும் முலைஉறு கலவைதீய, முள்இலாமுளரிச் செங்கேழ் மலர்மிசைமலர்பூத் தென்ன, மலர்க்கையால் வதனம் தாங்கி, அலமரும்உயிரி னோடும் நெடிதுஉயிர்த்து அயர்கின்றாரை- |
நலன்உறு -அழகுமிக்க; கணவர்தம்மை - கணவர் பால்; நவைஉற - குற்றம் உண்டாக; பிரிந்து - ஊடலால் அவரை விட்டு நீங்கி; விம்மும் - பருத்துள்ள; முலை - முலையின்கண்ணே; உறுகலவை - மிகுதியாகப் பூசப்பெற்ற சந்தனம்; தீய - தீய்ந்து போகும்படி; முள்இலா - முள்ளே இல்லாத; செங்கேழ் - சிவந்த ஒளிபெற்ற; முளரிமலர்மிசை - தாமரை மலரில்; மலர் பூத்த என்ன - மலரானது மலர்ந்தாற் போல; மலர்க்கையில் வதனம் தாங்கி - மலர் போன்ற கையால் முகத்தைத் தாங்கி; அலமரும் - ஊசலாடுகின்ற; உயிரினோடும் - உயிருடன்; நெடிது உயிர்த்து - பெருமூச்சு விட்டு; அயர்கின்றாரை - கவலைப்படுகின்ற மகளிர்களையும்; துன்பம்உண்டாக்கப் பிரிந்தவர் துன்புறுதல் அதிசயம் - இவர்கள் கோபம் ஊடற்கோபமோ ? விரகக் கோபமோ ? உணர்வரிது. சேக்கிழார், புலவியோ, பிரிவோ என்பார் (ஏயர்கோன் 315) திருக்குறள் இந்நிலையை 'நிறையழிதல்' என்னும் அதிகாரத்தில் பேசும். கணவர் தம்மை - கணவர்பால் - இரண்டன் உருபை ஏழன் உருபாக்குக. நவை - துன்பம். (113) |