4952. | ஓவியம்அனைய மாதர் ஊடினர்,உணர்வோடு உள்ளம் மேவிய கரணம்மற்றும் கொழுநரோடுஒழிய, யாணர்த் தூவியம் பேடைஎன்ன மின்இடைதுவள ஏகி, ஆவியும் தாமுமேபுக்கு அருங்கதவு அடைக்கின்றாரை- |
உணர்வோடுஉள்ளம் - உணர்ச்சியும்ஊக்கமும்; மேவிய கரணம் - ஒன்றியிருக்கும் அந்தக் கரணங்களும்; மற்றும் - பிற பொருள்களும்; கொழுநரோடு ஒழிய - கணவர்பால் சென்று தங்க (தனித்திருந்து); ஊடினர் - ஊடல் கொண்டு; யாணர் - அழகிய; தூவியம் பேடை என்ன - இறகையுடைய பெண் அன்னம் போல; மின் இடை - மின்னல் போன்ற இடையானது; துவள ஏகி - துவளும்படியாகப் புறம்பே போய்; ஆவியும் தாமுமேயாய் - பெருமூச்சும் தாமுமாக இருந்துகொண்டு; அருங்கதவு அடைக்கின்றார் - சிறந்த கதவை அடைக்கின்ற; ஓவியம் அனைய மாதர் (ஐ) - சித்திரம் போன்ற மாதரையும். கரணம்-மனம்,புத்தி சித்தம், அகங்காரம். உணர்வு-அறிவு உள்ளம்- ஊக்கம். தலைவிக்கு உதவியாக இருந்தது பெருமூச்சே., உள்ளம் மேவிய கரணம் என்பதை ஒரு தொடராக்கி அந்தக் கரணம் என்று உரை கூறுவர், சிலர். உள்ளம் - மனம் என்பர் சிலர். ஆவி-உயிர் என்று கூறப்பெற்றது. ஆவி-பெருமூச்சு. 'உணர்வு அழுங்க உயிர்த்தனள் ஆவியே' (கம்ப. 1092.) ஐ உருபு மாதருடன் கூட்டப் பெற்றது - அடைக்கின்ற மாதரை என அமைக்க. (118) |