4968. | மணிகொள்வாயிலில், சாளரத் தலங்களில், மலரில் கணிகொள்நாளத்தில், கால்என, புகைஎனக் கலக்கும் நுணுகும், வீங்கும்; மற்றுஅவன்நிலை யாவரே நுவல்வார் ? அணுவில்,மேருவில் ஆழியான் எனச்செலும்; அனுமன் |
ஆழியான் என -சக்கரப்படை ஏந்திய திருமாலைப் போல; அணுவின்- சிறிய அணுவின் கண்ணும்; மேருவின் - பெரிய மேருமலையின் கண்ணும்;செலும் அனுமன் - ஊடுருவிச் செல்ல வல்ல அனுமன்; மணிகொள்வாயிலில் - மணிகள் பதிக்கப்பெற்ற வாசல்களிலும்; சாளரத் தலங்களில் -பலகணி இடங்களிலும்; மலரில் - பூவின் கண்ணும்; கணிகொள் நாளத்தி்ல் -நுட்பமான பூக்களின் தண்டின் கண்ணும்; கால்என - காற்றைப் போலவும்;புகை என் - புகையைப் போலவும்; கலக்கும் - ஒன்று படுவான்; நுணுகும் - நுட்பமாகுவான்;வீங்கும் - பருமன் ஆகுவான்; அவன் நிலை - அந்த அனுமனின் நிலைமையை; நுவல்வார் - உள்ளபடி எடுத்துக் கூறவல்லவர்; யாவர் ? - எவர் ? மலரின்கண்ணும்,மலர்த்தண்டின் கண்ணும் புகைபோலக் காற்றைப் போல ஒன்றுபட்டுத் தேடினான் அனுமன். திருமால், மேருமலையிலும், அணுவிலும் அந்தர் யாமியாய் இருப்பான். அதுபோல் அனுமன் பெரும் பொருளிலும் சிறிய பொருளிலும் கலந்துள்ளான் என்க. நம்பிள்ளை, "பரமாணுக்கள் தோறும் நிறைந்திருப்பான். ஓர் அண்டத்தைச் சமைத்து அவ்வண்டத்தில் ஒருவனைத் தனியாக வைத்தது போன்று இருப்பான்," என்று வரைந்தார் (திருவாய் 11,10) தூணிலும் உளன்... கோணிலும் உளன் என்பது பிரகலாதனின் உறுதிப்பாடு. (கம்ப, 6312) (134) |