4991.

கரியநாழிகை பாதியில், காலனும்,
வெருவி ஓடும்அரக்கர்தம் வெம்பதி
ஒருவனே, ஒரு பன்னிரு யோசனைத்
தெருவு மும்மை நூறாயிரம் தேடினான்.

(அனுமன்)

     காலனும் -யமனும்கூட;வெருவி ஓடும் - அச்சமுற்று ஓடும்படியான;
அரக்கர்தம் வெம்பதி - அரக்கர்களின் கொடிய நகருள்; கரிய நாழிகை
பாதியில் -
இருண்ட நடுயாமத்தில்; ஒரு பன்னிரு யோசனை - பன்னிரண்டு
யோசனை தூரமுள்ள; மும்மை நூறாயிரம் தெருவும் - மூன்று லட்சந்
தெருக்களையும்; ஒருவனே - தான் ஒருவனாகவே; தேடினான் -
(பிராட்டியைத்) தேடிச் சென்றான்.

     அனுமன், யமனும்பயப்படும் அரக்கர் நகருள் நடுயாமத்தில்
பன்னிரண்டு யோசனை தூரமுள்ள மூன்று லட்சம் தெருக்களையும் தனியாகத்
தேடினான். இருண்ட இரவு - 'கரிய நாழிகை' என்று பேசப்பட்டது.
'கரியநாழிகை ஊழியின் பெரியன', என்பது பெரிய திருமொழி (திவ்ய பெரிய
திருமொழி 8-56)                                            (157)