4999.

நித்தம்நியமத் தொழிலர்ஆய், நிறையும் ஞானத்து
உத்தமர்உறங்கினர்கள்; யோகியர் துயின்றார்;
மத்தமதவெங்களிறு உறங்கின; மயங்கும்
பித்தரும்உறங்கினர்; இனிப் பிறர்இது என்னாம் ?

     நித்தம் -நாள்தோறும்; நியமத் தொழிலராய் - முறையாகச் செய்ய
வேண்டிய அனுட்டானங்கள் உடையவராய் (அதனால்); நிறையும் - நிரம்பிய;
ஞானத்து உத்தமர் -
ஞானத்தை உடைய மேலோர்கள்; உறங்கினர் -
தூங்கினார்கள்; யோகியர் - யோகவழியிலே நிற்பவர்களும்; துயின்றார் -
தூங்கினார்கள்; மத்தம் - மயக்கம் தருகின்ற; மதம் - மதம் பிடித்த;
வெங்களிறு -
கொடிய ஆண் யானைகளும்; உறங்கின - தூங்கின; மயங்கும்
-
மயங்குகின்ற; பித்தரும் - பைத்தியம் பிடித்தவர்களும்;  உறங்கினர் -
தூங்கினார்கள்; இனி - இனிமேல்; பிறர் இது - பிறருடைய உறக்கம்; என்
ஆம் -
யாதாகும்.

     உறங்கினர்கள்என்பதில் உள்ள 'கள்' அசை. பிறங்கின கெடுங்கள்
(சிந்தா. 1535)                                             (165)