இராவணனின் உரிமைமகளிராம் அரக்கியரின் நிலைமை 

5013.

இனையதன்மை இயக்கியர் ஈண்டிய
மனைஓர் ஆயிரம்ஆயிரம் வாயில் போய்
அனையவன் குலத்துஆயிழையார் இடம்
நினைவின்எய்தினன் - நீதியின் எய்தினான்.

     நீதியின்எய்தினான் - நீதியில் நடக்கும்அனுமன்; இனைய தன்மை -இப்படிப்பட்ட இயல்பைக் கொண்ட; இயக்கியர் - யட்சப் பெண்கள்;
ஈண்டிய- தங்கியிருக்கும்; ஆயிரம்  ஆயிரம் - பத்து லட்சம்;
மனைவாயில் -வீடுகளின் வாசல்களில்; போய் - நுழைந்து சென்று;
அனையவன் குலத்து -அந்த இராவணனின் குலத்தில் பிறந்த;
ஆயிழையார் இடம் - அரக்கியர்தங்கிய தெருவை; நினைவின் -
எண்ணத்தைப் போல் (விரைவாக); எய்தினன்- அடைந்தான்.

     அனுமன்இயக்கியர்கள் தங்கிய வீடுகளை ஆராய்ந்து பார்த்தபின்
அரக்கியர்கள் தங்கிய தெருவை அடைந்தான். இல்வாய் என்பது வாயில் என
மாறி நின்றது. உள்ளூர், முற்பகல், பிற்பகல், நுனிக்கொம்பர், கடைக்கண்,
கீழ்நீர் என்பனவும் இப்படிப்பட்டன. இங்ஙனம் வருவதை இலக்கண மரூஉ
என்பர். ஓர் - அசை                                      (179)