அரக்கியர் நிலை அறுசீர்விருத்தம் 5014. | எரிசுடர்மணியின் செங்கேழ் இளவெயில்இடைவிடாது விரியிருள்பருகி, நாளும் விளக்கின்றி விளங்கும் மாடத்து, அரிவையர் குழுவும்நீங்க ஆசையும்தாமுமே ஆய், ஒருசிறை இருந்து,போன உள்ளத்தோடு ஊடுவாரும். |
எரிசுடர் -நெருப்பைப் போன்ற; மணியின் - மணிகளின்; செம்கேழ் இளவெயில் - சிவந்த நிறத்தையுடைய இளமையான வெயிலானது; இடை விடாது - இடை விடாமல்; விரி இருள் பருகி - பரவிய இருளைக் குடிப்ப (அதனால்); நாளும் - எப்போதும்; விளக்கு இன்றி - விளக்குகள் இல்லாமல்; விளங்கும் மாடத்து - விளங்குகின்ற மாளிகையில்; அரிவையர் குழுவும் நீங்க - மகளிர் கூட்டம் விலகிச் செல்ல; ஒரு சிறை இருந்து - ஒரு பக்கத்தில் இருந்து கொண்டு; ஆசையும் தாமுமே ஆய் - காதலும் தாங்களுமாக; போன உள்ளத்தோடு - (இராவணன் பால் சென்ற) மனத்துடன்; ஊடுவாரும் - பிணங்குபவர்களும். குழுவும் - என்பதில் உள்ள 'உம்' அசை. காமக்கடல் மன்னும் உண்டே (குறள்) 'உம்' அசை நின்று பரிமேலழகர் வரைந்தார். அரிவையர் குழு நீங்கத் தாமும் தம் ஆசையுமாக இருந்தோர் இராவணன்பால் சென்ற உள்ளத்தை வெறுத்தனர். காமத்துப்பால், நெஞ்சொடு கிளத்தல் இப்பாடலுக்கு மூலம். (180) |