5016.

சவிபடுதகைசால் வானம்
     தான்ஒருமேனி ஆக,
குவியும் மீன் ஆரமாக,
     மின்கொடிமருங்குல் ஆக,
கவிர்ஒளிச்செக்கர் கற்றை
     ஓதியா,மழைஉண் கண்ணா
அவிர்மதிநெற்றி யாக
     அந்திவான்ஒக்கின் றாரும்.*

     சவிபடு - ஒளி பொருந்திய;தகைசால் வானம் - சிறப்பு மிக்க
ஆகாயம்; மேனி ஆக - உடலாகவும்; குவியும் மீன் - நெருங்கிய
நட்சத்திரங்கள்; ஆரம் ஆக - முத்து மாலையாகவும்; மின்கொடி - மின்னற்
கொடிகள்; மருங்குல் ஆக - இடையாகவும்; கவிர் ஒளிர் - முருக்கம்
பூவைப் போல் ஒளி விடுகின்ற; செக்கர் - செவ்வானம்; கற்றை ஓதியா -
தொகுதியுடன் கூடிய கூந்தலாகவும்; மழை - மேகமானது; உண்கண்ணா -
மை பூசிய கண்களாகவும்; அவிர்மதி - பிரகாசிக்கும் பிறைச்சந்திரன்;
நெற்றியாக - நெற்றியாகவும் (அமைய); அந்தி வான் ஒக்கின்றாரும் -
அந்தி வானத்தை ஒத்திருப்பவர்களும்.

     அரக்கியர்கருநிறத்தவர்கள். ஆதலின் சவிபடுவானம் என்பதற்கு
ஒளியழிந்த (இருண்ட) வானம் என்று பொருள் கோடல் சிறக்கும் போலும் -
ஒளி மிக்க வானம் அரக்கியர்க்கு ஒவ்வா. மதி என்றது பிறையை - பிறையை
அணிந்த இறைவனை 'குளிர் மதிக் கண்ணியான்' என்றார் தேவர் (சிந்தா 208)
தான் - ஓர் - உரையசை.                                    (182)