5019.

பன்னகஅரசர் செங்கேழ்ப்
     பணாமணிவலிதின் பற்றி,
இன்உயிர்க்கணவன் ஈந்தான்
     'ஆம்' எனஇருத்தி, விஞ்சை
மன்னவர் முடியும்,பூணும்
     மாலையும்,பணையம் ஆக
பொன்அணிபலகைச் சூது
    துயில்கிலர் பொருகின்றாரும்.

     இன்உயிர்க்கணவன் - இனிய உயிர் போன்ற இராவணன்; பன்னக
அரசர் -
பாம்புகளின் தலைவனான ஆதிசேடனின்; செங்கேழ் - சிவந்த
நிறம் மிக்க; பணாமணி - படத்து மணிகளை; வலிதின் பற்றி - வலிமையால்
கவர்ந்து; ஈந்தான் - (எனக்குக்) கொடுத்துள்ளான்; ஆம் - எனக்கு பரிசப்
பொருளாம்; என - என்று கூறி; இருத்தி - (அவற்றை) வைத்துக் கொண்டு;
விஞ்சை மன்னவர் - வித்தியாதர வேந்தர்களின்; முடியும் - கிரீடங்களையும்;
பூணும் - ஆபரணங்களையும்; மாலையும் - மாலைகளையும்; பணையம்
ஆக -
பந்தயப் பொருள்களாக வைத்து; பொன் - தங்கத்தாற் செய்யப்
பெற்ற; அணி - அழகிய; பலகை - சதுரங்கப் பலகையில்; சூது - சூதாட்டப்
போரை; துயில்கிலர் - உறங்காமல்; பொருகின்றாரும் - செய்கின்ற சிலரும்.

     பன்னக அரசர் -ஆதிசேடன் முதலியவர். பணையம் - பந்தயப்
பொருள். இராவணன் வழங்கிய பொருளாதலின் 'பணாமணி' பந்தயப்
பொருளாக வைக்கப்படவில்லை - அரக்கியர்க்கு வித்தியாதர
 வேந்தர்களின்
முடிமுதலானவை பணையப் பொருளாயின என்றதனால் இலங்கையின்
செல்வவளம் பேசப் பெற்றது.                               (185)