| 5022. | தண்டலைவாழை அன்ன குறங்கிடை,அல்குல் தட்டில், கொண்டபூந்துகிலும், கோவைக் கலைகளும்சோர, கூர்ங்கள் உண்டு அலமந்தகண்ணார் ஊசலிட்டுஉலாவு கின்ற குண்டலம்திருவில் வீச குரவையில்குழறு வாரும். |
கூர்ங்கள் உண்டு- மயக்கம் மிக்க கள்ளை உண்டு; அலமந்த கண்ணார் - சுழலும் கண்களை யுடையவர்கள்; தண்டலை - தோட்டத்தில் உள்ள; வாழை அன்ன - வாழை போன்ற; குறங்கிடை - தொடைகளில்; அல்குல் தட்டில் - தேர்த்தட்டுப் போன்ற அல்குலில்; கொண்ட - உடுத்த; பூந்துகிலும் - பூத்தொழிலையுடைய சேலையும்; கோவைக் கலைகளும் - கோக்கப் பெற்ற இடையணிகளும்; சோர - சரிந்து நீங்கவும்; ஊசலிட்டு - ஊசலின் தன்மை பெற்று; உலாவுகின்ற - அசைகின்ற; குண்டலம் - குண்டலமானது; திருவில் வீச - வானவில்லின் ஒளியை வெளிப்படுத்த; குரவையில் - குரவைக் கூத்தாடுவதில் (இலயம்); குழறுவாரும் - தடுமாறுபவர்களும். மயக்கம் தரும்கள்ளையுண்டு, சேலையும், இடையணியும் சோர, குண்டலம் அசைய ஆடும் குரவையாட்டத்தில் இலயம் தடுமாறுபவர்களும். 186 ஆம் பாடல் காதலால் நிலைகுலைந்தும் முறை தவறாது பாடும் அரக்கியரைக் காட்டினார் கவிஞர். இங்கு கள்ளுண்டமையால் குரவையில் இலயம் தவறியவர்களை அறிமுகப் படுத்துகிறார். தண்டலை - தோட்டம். பூந்திரள் தண்டலை என்னும் மதுரைக்காஞ்சித் (47) தொடர்க்கு இனியர் 'பூத்திரளையுடைய பூந்தோட்டங்கள்' என்று உரை வகுத்தார். பூந்துகில் - பூத்தொழிலை உடைய சேலை. பூந்துகில் மரீஇய ஏந்து கோட்டல்குல் (நெடுநல் 145) குரவை - குரவைக் கூத்து. திருவில் - வானவில். குண்டலம் திருவில் வீச (சிந்தா 677) (188) |