| 5023. | நச்சுஎனக்கொடிய நாகக் கள்ளொடுகுருதி நக்கி பிச்சரின்பிதற்றி அல்குல் பூந்துகில்கலாபம் பீறி குச்சரித்திறத்தின் ஓசை களம்கொள,குழுக்கொண்டு ஈண்டி சச்சரிப் பாணிகொட்டி நிறைதடுமாறு வாரும். |
நாகநச்சு என -பாம்பின்விடமென்று கூறத் தக்க; கொடிய - கொடுமையான; கள்ளொடு குருதி நக்கி - கள்ளையும் குருதியையும் உண்டு; பிச்சரின் பிதற்றி - பித்தர்களைப் போலக் குழறிப் பேசி; அல்குல் பூந்துகில்- அரையிற் கட்டிய ஆடையையும்; கலாபம் - மேகலையையும்; பீறி -சிதைத்து; குச்சரி - குச்சரி என்று கூறப்பெறும்; திறத்தின் ஓசை - திறப்பண்ணின் ஓசையானது; களம் கொள - மிடற்றை இடமாகக் கொள்ள; குழூஉக் கொண்டு - கூட்டமாகச் சேர்ந்து; ஈண்டி - ஒன்றுபட்டு; சச்சரி - சச்சரி என்னும் வாத்தியத்தில்; பாணி கொட்டி - தாளத்தை வரையறுத்து; நிறை தடுமாறு வாரும் - மனத்தை நிறுத்த முடியாமல் குலைபவர்களும். கள்ளைப்பாம்பின் விடமென்றார் - பாம்பு வெகுண்டன்ன தேறல். என்றும் (சிறுபாண் - 237) பாம்புக் கடுப்பன்ன தோப்பி என்றும் (அகம் 348) சங்க இலக்கியம் பேசும். குச்சரி - கிளைப்பண். பெரும்பண்ணிற்கிளைப்பண் திறம் - குச்சரி ஐந்தாம் சாமத்தில் பாடப் பெறும். குச்சரி மல்லரி .... அஞ்சாம் சாமத்தில் பாட என்று பஞ்ச மரபு பேசும் சச்சரி - ஒரு வகை வாத்தியம். கொக்கரை சச்சரி வீணை (71) பாணியாணை (அப்பர் 288 - 7) பாணி கொட்டுதல், தாளத்தை வரையறுத்தல். மறக்க உண்ட மதுவும் பிறவும் பயன்படாமையால் காதல் நினைவால் தடுமாறினர். (189) |