5028.

சிறுகுகாலங்கள் ஊழிகள் ஆம்வகை
     திரிந்து,சிந்தனை சிந்த,
முறுகு காதலின்வேதனை உழப்பவர்,
     முயங்கியமுலை முன்றில்
இறுகு சாந்தமும்,எழுதிய குறிகளும்
     இன்உயிர்ப் பொறை ஈர,
மறுகு வாட்கண்கள்சிவப்புற நோக்கினர்;
     வயிர்த்தனர்; உயிர்க்கின்றார்.

     சிறுகு காலங்கள் -மிகச்சிறிய நாழிகை முதலான காலங்கள்; ஊழிகள்
ஆம்வகை -
பலயுகங்கள் ஆகும்படியாக; சிந்தனை - மனமானது; திரிந்து
சிந்த-
வேறுபட்டுச் சிதறிப் போக; முறுகு காதலின் - முற்றிய காமத்தாலே;
வேதனை உழப்பவர் - துன்பத்தால் வருந்தி; முயங்கிய - இராவணன்.
தழுவிய; முலைமுன்றில் - முலைத் தடத்திலே (அவன் பூசிய); இறகு
சாந்தமும் -
உலர்ந்த சந்தனமும் (அவனால்); எழுதிய - எழுதப்பெற்ற;
குறிகளும் - கரும்பு முதலிய சித்திரங்களும்; இன் - இனிமையான;
உயிர்ப்பொறை - உயிராகிய பாரத்தை; ஈர - அறுக்க; மறுகு - கலங்குகின்ற;
வாட்கண்கள் - வாள் போன்ற கண்களானது; சிவப்புற - செந்நிறம் அடைய;
நோக்கினர் வயிர்த்தனர் - (இராவணன் வருகையை) பார்த்து சினம்
கொண்டு; உயிர்க்கின்றார் - பெருமூச்சு விடுகின்றனர்.

     சிறு காலங்கள்,நொடி, இமை, முதலியவை. முலைமுன்றில் - மார்பு.
இளங்கோ அடிகள் 'கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள்' என்பர். முலை
முதல் முற்றம் என்னும் சிந்தாமணித் தொடருக்கு (25-39) முலை
தோன்றுவதற்குக் காரணமாகிய மார்பு என்று இனியர்; விளக்கம் வரைந்தார்.
நோக்கியதால் கண்கள் சிவந்தன - உயிர்ப்பொறை - உயிராகிய பாரம். பண்புத்
தொகை. அதற்கு உடல் என்றும் கூறலாம். முலை முன்றில் இறுகும் சாந்தம்
இராவணனுடனே கூடின காலம் அவன் மார்பில் சந்தனங்கள் முலை
மத்தியிலே கி்டக்கக் கண்டு என்பது பழைய உரை. (அடை - பதி) வயிர்த்தது
- காலம் தாழ்த்தியமை பற்றி.                                  (194)