5037. | என்றுஉணர்ந்து நின்று ஏமுறும் நிலையினில் 'நிற்க இத்திறன்' என்னா பின்றுசிந்தையன் பெயர்ந்தனன்; அம்மனை பிற்படப்பெருமேருக் குன்று குன்றியதகைஉற ஓங்கிய கொற்றமாளிகை தன்னில் சென்று புக்கனன்; இராவணன் எடுப்பருங் கிரியெனத்திரள் தோளான். |
இராவணன்எடுப்பரும் - இராவணனால்பெயர்த்தெடுக்க முடியாத; கிரிஎன - மலைபோல; திரள் தோளான் - திரண்ட தோள்களையுடைய அனுமன்; என்று உணர்ந்து - என்று அறிந்து; நின்று - நிலைபெற்று; ஏம் உறு நிலையினில் - இன்பம் பொருந்திய நிலைமையில்; இத்திறன் நிற்க - ஆராயும் இத்தன்மை இருக்கட்டும்; என்னா - என்று கருதி; பின்று - திரும்பிய; சிந்தையன் - மனத்தை உடையவனாய்; அம்மனை - அந்த மண்டோதரியின் மாளிகை; பிற்பட - பின்னே செல்ல; பெயர்ந்தனன் - நீங்கிப்போய்; பெருமேருக்குன்று - பெரிய மேருமலை; குன்றிய தகைஉற - தாழ்ந்த தன்மையடைய; ஓங்கிய - உயர்ந்துள்ள; கொற்ற மாளிகை தன்னில் - வெற்றி பொருந்திய மாளிகையில்; சென்று புக்கனன் - சென்று சேர்ந்தான். ஏம் - இன்பம்.பின்று சிந்தை - மீண்ட சிந்தனை. குன்றிய தகை - தாழ்ந்த தன்மை. (203) |