5039.

புக்குநின்று, தன்புலன் கொடு நோக்கினன்
     பொருவருந் திருவுள்ளம்
நெக்குநின்றனன், நீங்கும் அந்தோ இந்த
     நெடுநகர்த்திரு என்னா,
எக்குலங்களின்யாவரே யாயினும்
     இருவினை எல்லார்க்கும்
ஒக்கும்; ஊழ்முறைஅல்லது, வலியது ஒன்று
     இல் என,உணர்வுற்றான்.்

(அனுமன்)

     புக்குநின்று -போய்நின்று; தன் - தன்னுடைய; புலன்கொடு -
அறிவைக்கொண்டு; நோக்கினன் - பார்த்து; இந்த நெடுநகர்த்திரு - இந்த
பெரிய நகரின் செல்வம்; நீங்கும் - அழியும்; அந்தோ - ஐயோ !; என்னா-என்று கருதி; பொரு அரு - ஒப்புமை இல்லாத; திருவுள்ளம் - நன்மனம்;
நெக்கு நின்றனன் - நெகிழ்ந்து நின்றான்; எக்குலங்களின் - எந்தக்
குலத்தினில் (தோன்றிய); யாவரேயாயினும் - எவராக இருந்தாலும்;
எல்லோர்க்கும் - யாவருக்கும்; இருவினை - நல்வினை தீவினைகள்; ஒக்கும்- ஒரு மாதிரியே ஆகும்; ஊழ் - ஊழ் வினையின்; முறையல்லது -
நியதியைத் தவிர; வலியது - வலிமையுடையது; ஒன்று - வேறொரு பொருள்;
இல் என - இல்லை என்று; உணர்வுற்றான் - சிந்தித்தான்.

     அனுமன்,இலங்கையில் நிகழ்ந்த நிலன்துடித்தல் முதலிய
உற்பாதங்களைக் கண்டு இந்நகரின் நிலைமை அறிந்து வருந்தினான்.

     'ஊழிற் பெருவலியாவுள' என்னும் தமிழ்மறை (குறள் 380) அனுமன்
மூலம் வெளிப்படுகிறது.

     பிறர்கேட்டைநினைந்து வருந்தினான் ஆதலின் பொருவறு திருவுள்ளம்
என்றான்.                                                 (205)