5041.

குழவிஞாயிறு குன்று இவர்ந்தனையன
     குருமணிநெடுமோலி
இழைக ளோடுநின்று இளவெயில் எறித்திட,
     இரவெனும்பொருள் வீய,
முழைகொள்மேருவின் முகட்டிடைக் கனகனை
     முருக்கியமுரண்சீயம்,
தழைகொள்தோளொடு தலைபல பரப்பி, முன்
     துயில்வது ஓர் தகையானை-

     குன்றுஇவர்ந்தனையன - மலையின்கண் ஏறிய; குழவி ஞாயிறு
அனைய -
இளஞ்சூரியன் போன்ற; குருமணி - ஒளிமிக்க மணிகள்
பதிக்கப்பெற்ற; நெடுமோலி - நீண்ட கிரீடங்கள்; இழைகளோடு நின்று -
ஆபரணங்களுடன் நிலைத்து; இளவெயில் - மெல்லிய ஒளி; எறித்திட -
வீசவும்; இரவெனும் - இருள் என்று பேசப்படும்; பொருள் வீய - பொருள்
அழியவும்; முழைகொள் - குகைகளைப் பெற்ற; மேருவின் முகட்டிடை -
மேருமலையின் உச்சியில்; கனகனை முருக்கிய - இரணியனைக் கொன்ற;
முரண்சீயம் - வலிமைபெற்ற நரசிங்கமூர்த்தி; தழைகொள் - (பலவாக)
தழைத்தலைக் கொண்ட; தோளொடு - தோள்களையும்; தலை பல - பல
தலைகளையும்; பரப்பி - பரப்பிக்கொண்டு; முன் துயில்வது - முன்னே
உறங்குவதைப் போன்ற; ஓர் - ஒப்பற்ற; தகையானை - தன்மை
உடையவனை (இராவணனை).

     நரசிம்மமூர்த்திமலையின் குகையில் இருப்பதாக உபநிடதம் (நரசிம்ம
உபநிடதம் 409) பேசும். அது இங்கு நினைவுக்கு வருகிறது. முழையில் இருந்த
சிங்கம் முகட்டில் வந்து இரணியனைக் கொன்றது போலும்.          (207)