5044. | சாந்துஅளாவிய கலவைமேல் தவழ்வுறு தண்தமிழ்ப் பசுந்தென்றல், ஏந்து காமவெங்கனல் உயிர்த்து, இருமடி துருத்தியின் உயிர்ப்பு ஏற காந்தள்மெல்விரல் சனகிமேல் மனம்முதல் கரணங்கள்கடிது ஓடப் பாந்தள்நீங்கிய முழைஎன, குழைவுறு நெஞ்சுபாழ்பட் டானை-- |
கலவை அளாவிய -கற்பூரம்முதலான கலவைகளைப் பெற்ற; சாந்துமேல் - சந்தனப் பூச்சின்மேல்; தவழ்வுறு - தவழ்கின்ற; தண்டமிழ் - குளிர்ந்த தமிழ் மொழியினுடன் பிறந்த; பசுந்தென்றல் - இளந்தென்றல் காற்றால்; காந்து - சுடுகின்ற; வெம் - கொடுமையான; காம கனல் - காமமாகிய நெருப்பு; உயிர்த்து - வெளிப்பட்டு (அதனால்); இருமடி - இரண்ட மடங்கு; துருத்தியின் - துருத்தியைப்போல; உயிர்ப்பு - பெருமூச்சு; ஏற - அதிகரிக்க; காந்தள் மெல்விரல் - காந்தள் மலரைப் போன்ற மெல்லிய விரலைப்பெற்ற; சனகிமேல் - சீதாப் பிராட்டியின்பால்; மனம் முதல் கரணங்கள் - மனம் முதலான கரணங்கள்; கடிது ஓட - வேகமாகச் சென்று சேர (அதனால்);பாந்தள் நீங்கிய - பாம்புகள் நீங்கப்பெற்ற; முழை என -புற்றைப்போல; குழைவுறு - நெகிழ்ந்த; நெஞ்சு - இதயம்; பாழ்பட்டானை-சூனியம்பட்டவனை (இராவணனை). தென்றலுடன்தமிழ் பிறந்தது என்பது இலக்கிய வழக்கு. 'மறம் பயின்றது எங்கோ தமி்ழ் மாருதம்' என்பர் தொண்டர் சீர் பரவுவார் (பெரிய தடுத்தாட் - 167). குமரகுருபரர், 'தென்னந்தமிழினுடன் பிறந்த சிறுகால்' என்பர் (மீனாட்சி - தால் - 1) இராவணனின்அந்தக் கரணங்கள் பாம்பு போன்றவை. அவன் இதயம் புற்றையொப்பது. ஏந்துகாமவெங்கனலினுக்கு உமிழ் அதள் துருத்தியின் உயிர்ப்பேற -எனப்பாடங்கொண்டு, இராவணன் கொண்டுள்ள காமமாகிய கொடியநெருப்புக்கு புகுத்துகிற தோல்துருத்தியின் காற்றாக ஏற எனப்பொருள் உரைப்பர். அவர் துருத்தியின் காற்றாக ஏறுவது தென்றல் என்பர். தென்றல், துருத்தியின் உயிர்ப்பு ஏற, என முடிப்பர். அதள்துருத்தி -தோல்துருத்தி. (210) |