5052.

கண்டனன்;காண்ட லோடும்
    கருத்தின்முன் காலச் செந்தீ
விண்டன கண்கள்;கீண்டு
     வெடித்தன;கீழும் மேலும்;-
கொண்டது ஓர்உருவம் மாயோன்
     குறளினும்குறுக நின்றான்-
திண்தலைபத்தும், தோள்கள்
     இருபதும்தெரிய நோக்கி,

     மாயோன் -திருமால்;கொண்டது - (விரும்பி) ஏற்றுக் கொண்ட;
உருவம் குறளினும் -
அழகிய வாமன வடிவத்தைவிட; குறுகி நின்றான் -
சுருங்கி இருந்த அனுமன்; திண் - வன்மைமிக்க; பத்துத் தலையும் - பத்து
தலைகளும்; இருபது தோள்களும் - இருபது கைகளும்; தெரிய -
தெரியும்படியாக; நோக்கிக் கண்டனன் - உற்றுப் பார்த்தான் (அப்போது);
காண்டலும் கருத்தின் முன் -
 கண்ட அளவிலே (இவன் இராவணன்) என்றுநினைவதன்முன்; கண்கள் - (அனுமனின்) கண்களிலிருந்து;
காலச்செந்தீ -காலாக்கினிகள்; விண்டன - வெளிப்பட்டன; கீழும் -
மண்ணுலகமும்;மேலும் - விண்ணுலகமும்; கீண்டு வெடித்தன - வெடித்துச்
சிதறின.


     
ஊழிக்காலத்தில்,ஆதிசேடனின் விடக் கனலும் சிவபிரானின் நெற்றித்
தழலும் வடவாமுகாக்கினியும் உலகை அழிக்கும். ஆதலின் செந்தீ விண்டன
என்று கூறப்பெற்றது. தீ - பால்பகா அஃறிணைப் பெயர். நோக்கிக் கண்டனன்
- உற்றுப் பார்த்தான். ஆழ்வார், என் நெஞ்சினால் நோக்கிக்  காணீர் என்பர்.
(திவ்ய திருவாய் 5.5-2). சில பிரதிகளில் பின் இரண்டடி முன்னே இருப்பதாகக்
கூறப்பெறுகிறது. அதுவே சரி என்று தெரிகிறது. தோள் - கை. 'எண்டோள்
வீசி நின்று ஆடும்பிரான்' என்று சான்றோர் பிரயோகம் காண்க (அப்பர்
தேவாரம்) மேலே பதினொரு பாடலால் பேசப்பட்ட இராவணனைக் கண்டனன்
என்க.                                                     (218)