| 5054. | நடித்துவாழ் தகைமையதோ அடிமைதான்? நன்னுதலைப் பிடித்து, வாழ்அரக்கனார் யான்கண்டும் பிழைப்பாரோ ? ஒடித்துவான்தோள்அனைத்தும் தலைபத்தும்உதைத்துருட்டி முடித்து, இவ்வூர்முடித்தால், மேல் முடிவதெலாம்முடிந்தொழிக. |
அடிமை - தொண்டின் இயல்;நடித்து - பாவனை செய்து (அதனால்); வாழ் - உயிர் வாழ்கின்ற; தகைமையதோ - தன்மையுடையதா ?; நன்னுதலை - அழகிய நெற்றியுடைய பிராட்டியை; பிடித்து - சிறையிலடைத்துவிட்டு; வாழ் அரக்கனார் - வாழ்கின்ற இராவணனை; யான் கண்டும் - யான் பார்த்த பிறகும்; பிழைப்பாரோ - (அழியாமல்) தப்புவரோ ?; வான்தோள் அனைத்தும் - (இராவணணின்) பெரிய தோள்கள் யாவற்றையும்; ஒடித்து - முறித்து; தலை பத்தும் - பத்துத் தலைகளையும்; உதைத்து - காலாலே தாக்கி; உருட்டி - (பூமியிலே) உருளச் செய்து; முடித்து - (இராவணனைக்) கொன்று; இவ் ஊர் - இந்த இலங்கையை; முடித்தால் - அழித்தால்; மேல் - பிறகு; முடிவது எல்லாம் - நடக்க வேண்டியவை யாவும்; முடிந்தொழிக - நடக்கட்டும். நடித்தல் -பாவனை செய்தல். பாசாங்கு செய்தல். நாடகத்தால் உன் அடியார்போல் நடித்து (திருவாசகம்). முடிவது - நடப்பது.ஒழிக - வெறுப்பைக் காட்டும் சொல். 'கெடுத்து ஒழிந்தனை உன்னையும் என்னையும்' (கம்ப. 6212) (220) |