5060.

கொன்றானோ ? கற்பழியாக்
     குலமகளை ?கொடு்ந்தொழிலால்
தின்றானோ ?எப்புறத்தே
    செறித்தானோ சிறை ? சிறியேன்
ஒன்றானும்உணரகிலேன்;
     மீண்டுஇனிப்போய் என்னுரைக்கேன்
பொன்றாதபொழுது, எனக்கு இக்
    கொடுந்துயரம் போகாதால்.

(இராவணன்)

     கற்பு அழியா- கற்பு நிலையிலிருந்து பிறழாத; குலமகளை - தூய
பிராட்டியை; கொன்றானோ - கொன்றுவிட்டானோ; கொடுந்தொழிலால் -
(புலால் உண்ணும்) கொடிய செயலால்; தின்றானோ - தின்று விட்டானோ;
எப்புறத்தே - எந்த உலகத்தில்; செறித்தானோ - சிறையில் அடைத்து
வைத்தானோ; சிறியேன் - அற்ப அறிவுடைய யான்; ஒன்றானும் - ஒரு
சிறிதும்; உணரகிலேன் - அறியாதவனாய் உள்ளேன்; இனி - இனிமேல்;
மீண்டும் போய் - திரும்பிச் சென்று (இராமபிரானுக்கு); என்
உரைக்கேன் -
யாது கூறுவேன்; இக் கொடுந்துயரம் - (பிராட்டியைக் காணாத)
இப்பெருந்துன்பம்; பொன்றாத பொழுது - செத்தால் அன்றி;
எனக்கு - (மானமுடைய) எனக்கு; போகாது - நீங்காது.

    இறந்தால்துன்பம் நீங்கும் என்பது கருத்து. ஆல் - அசை. ஒன்றானும் -
சிறிதும். ஒன்று ஆயினும் என்பது ஒன்றானும் என வந்தது. ஒன்று - சிறிது.
ஓம்படை ஒன்றும் சொல்லாள் (சிந்தா - 232) இனியர் பரிகாரம் சிறிதும்
கூறாளாய், என எழுதினார். ஆனும் என்பது ஆயினும் என்பதன் திரிபு.                                                  (226)