பிராட்டியின் பழைய நினைவுகள்
கலி விருத்தம் | 5087. | 'தெவ் மடங்கிய சேண் நிலம்' -- கேகயர் தம் மடந்தை --'உம் தம்பியது ஆம்' என, மும் மடங்குபொலிந்த முகத்தினன் வெம் மடங்கலைஉன்னி, வெதும்புவாள். |
கேகயர்தம்மடந்தை - கேகய அரசனின் மகளானகைகேசி; தெவ் மடங்கிய - பகைவர்கள் புற முதுகு காட்டி ஓடும்படி; (வீரம் பெற்ற) சேண்நிலம் - பரந்த கோசல நாடு; உன் தம்பியது ஆம்என - உன் தம்பியான பரதனுக்கே உரியது என்று கூற; மும்மடங்கு பொலிந்த முகத்தினன் - (இயல்பான நிலையினும்) மூன்று மடங்கு பொலிவாக விளங்கிய முகத்தைப் பெற்ற; வெம் மடங்கலை - யாவரும் விரும்பும் சிங்கம் போலும் இராமபிரானை; உன்னி - நினைந்து; வெதும்புவாள் - (துன்பத்தால்) வெப்பம் அடைவாள். மும்மடங்குபொலிந்தன (யுத்த) என்னும் பகுதியைக் கருதுக. இக்கலிவிருத்தம் மா-விளம்-விளம்-விளம் என்னும் 4 சீர்களைப் பெற்று வரும். இதனை 'அளவியற் சந்தம்' என்று கம்பன் அடிப்பொடி அவர்கள் குறிக்கிறார்கள். இத்தகைய பாடல்கள்இந்நூலில் 1198 உள்ளன. (19) |