| 5103. | 'நஞ்சு அனையான், வனத்து இழைக்க நண்ணிய வஞ்சனை நாள்,வலம் துடித்த; வாய்மையால் எஞ்சல; ஈண்டுதாம் இடம் துடிக்குமால்; "அஞ்சல்" என்றுஇரங்குவாய்! அடுப்பது யாது ?' என்றாள். |
அஞ்சல் என்றுஇரங்குவாய் - பயப்படாதே என்று கருணை காட்டுபவளே ! நஞ்சு அனையான் - விடம் போன்ற இராவணன்; வனத்து - காட்டிலே; வஞ்சனை இழைக்க - வஞ்சகத்தைப் புரிய எண்ணி; நண்ணிய நாள் - (பஞ்சவடியை) அடைந்த அன்று; வலம் துடித்த - வலப்புற அங்கங்கள் துடித்தன; வாய்மையால் - (இத்துடிப்பு நிகழ்ச்சிகள் நன்மை தீமை) உண்மையால் உணர்த்தும்; ஈண்டு - இப்போது; எஞ்சல - குறைவில்லாதன; இடம் துடிக்கும் - இடப்புறத்து அங்கங்கள் துடிக்கும்; அடுப்பது யாது - என்னை வந்து அடையும் நன்மை யாது; என்றாள் - என்று கூறினாள். இரங்குவாய்என்பது திரிசடையை நோக்கிய விளி. வாய்மை - ஆல், துடிக்கும் ஆல் - ஆல்கள் - அசை. வலம் துடித்த வாய்மையால் என்று சேர்த்துப் பொருள் கூறுவாரும் உளர். (35) |