அரக்கியர் நடுவில்இருப்பவள் சீதையே என அனுமன் தெளிதல் 5133. | 'எள் அரும் உருவின் அவ் இலக்கணங்களும், வள்ளல் தன்உரையொடு மாறு கொண்டில, கள்ள வாள் அரக்கன் அக் கமலக் கண்ணனார் உள்உறை உயிரினைஒளித்து வைத்தவா ! |
(அரக்கியர் நடுவில்இருப்பவர் பால்) எள் அரும் -பழிப்பற்ற; உருவின் - திருமேனியின்கண்; அவ் இலக்கணங்களும் - நல்ல சாமுத்திரிகா லட்சணங்களும்; வள்ளல் தன் உரையொடு - இராமனின் மொழிகளோடு; மாறு கொண்டில - வேறுபட்டிருக்கவில்லை. (ஆகையால் இவள் சீதையே); கள்ளவாள் அரக்கன் - வஞ்சனையும் கொடுமையுமுடைய இராவணன்; அக்கமலக் கண்ணனார் - அந்த தாமரை போன்ற கண்களைப் பெற்ற இராமபிரான்; உள் உறை உயிரினை - உள்ளத்தில் வாழும் உயிரை; ஒளித்து வைத்தவா - மறைத்து வைத்த கொடுமை எப்படிப்பட்டது. வைத்த ஆறு என்பதுவைத்தவா எனக் குறைந்து வந்துள்ளது 'என்னே நிருபன் இயற்கை இருந்தவா' (கம்ப, 1713) (65) |