5137. | 'புனை கழல்இராகவன் பொன் புயத்தையோ ? வனிதையர்திலகத்தின் மனத்தின் மாண்பையோ ? வனை கழல்அரசரின் வண்மை மிக்கிடும் சனகர்தம்குலத்தையோ ? யாதைச் சாற்றுகேன் ? |
கழல்புனை -வீரக்கழல் அணிந்த; இராகவன் பொன் புயத்தையோ -இராமபிரானின் அழகிய தோள்களையே ? வனிதையர் திலகத்தின் - பெண்களின் திலகம் போன்ற பிராட்டியின்; மனத்தின் மாண்பையோ - திருவுள்ளத்தின் மாட்சிமையையோ ? கழல் வனை - வீரக்கழல் அணிந்த; அரசரின் - அரசர்களுக்குள்ளே; வண்மை மிக்கிடும் - கொடைப்பண்பால் உயர்ந்த; சனகர்தம் குலத்தையோ - சனகரின் குலத்தையோ; யாதைச் சாற்றுகேன் - எதைப் புகழ்வேன். ஒன்றின் ஒன்றுவிஞ்சி இருத்தலின் யான் எதைப் புகழ்வேன் என்றான். என்றாலும் மரபினும் புயம் உயர்ந்தது. புயத்தினும் மனம் உயர்ந்தது என்பதை அறிக. (69) |