5138.

'தேவரும் பிழைத்திலர்; தெய்வ வேதியர்
ஏவரும்பிழைத்திலர்; அறமும் ஈறு இன்றால்;
யாவது இங்குஇனிச் செயல் அரியது, எம்பிராற்கு?
ஆவ ! என்அடிமையும் பிழைப்பு இன்றாம்அரோ.

     தேவரும்பிழைத்திலர் - தேவர்களும் பிழைசெய்திலர்; தெய்வ
வேதியர் ஏவரும் -
தெய்வத் தன்மையுடைய எந்த வேதியரும்; பிழைத்திலர்
-
பிழை செய்திலர்; என் அடிமையும் - என்னுடைய அடிமைப் பணியும்;
பிழைப்பு இன்றாம் - பிழையற்றுள்ளது (ஆதலால்); இனி - இனிமேல்;
அறமும் ஈறு இன்று - தருமமும் அழியாது.

    எம் பிராற்குஇங்கு - எம்பெருமானாகிய இராமபிரானுக்கு இவ்விடத்தில்
இனி செயல் அரியது யாவது - செய்யவியலாத செயல் எது ? தேவரும்
வேதியரும் தொண்டும் பிழையா இடத்தே அறம் அழியாது. அறம் அழியா
இடத்தில் தெய்வம் வெளிப்பட்டு அருளும் என்பது கருத்து. ஆவ -
வியப்புக்குறிப்பு. அரோ - அசை.                                (70)