இராவணன் அங்கேதோன்றுதல்

5145.

என்று, இவைஇனையன எண்ணி, வண்ண வான்
பொன் திணி நெடுமரப் பொதும்பர் புக்கு, அவண்
நின்றனன்; அவ்வழி நிகழ்ந்தது என் எனின்,
துன்று பூஞ்சோலைவாய் அரக்கன் தோன்றினான்.

(அனுமன்)

     என்று - என; இவை -இவற்றையும்; இனையன - இவை
போன்றவற்றையும்; எண்ணி - நினைத்து; வண்ணம் - அழகியதும்; வான் -
உயர்ந்ததும் (ஆகிய); பொன் - பொன்னால் அமையப் பெற்றதும்; திணி -
செறிவுடையதும் (ஆகிய); நெடுமரப் பொதும்பர் - பெரிய மரச் செறிவில்;
புக்கு - புகுந்து; அவண் - அவ்விடத்தில் (மறைந்து); நின்றனன் - நின்றான்;
அவ்வழி - அவ்விடத்தில்; நிகழ்ந்தது - நடந்தது; என் எனின் - என்ன
வென்றால்; பூ துன்று - மலர்கள் நெருங்கிய; சோலைவாய் -
சோலையின்கண்
 (அனுமனுக்கு); அரக்கன் தோன்றினான் - இராவணன்
தோன்றினான்.

    பொதும்பர் -சிலேடைச் சொல். மரச் செறிவு. மரப் பொந்து என்னும்
பொருள்களைத் தரும். 'வெயில்கண் போழாப் பயில் பூம் பொதும்பில்' என்னும்
பெருங்கதையும் (1 - 28 - 27) 'பொதும்பு பொள்ளல் பொந்தாம்' எனும் பிங்கல
நிகண்டும் (2853) நோக்குக. அனுமன் மரச் செறிவிலிருந்தது நோக்கினான்,
என்று வான்மீகமும், மரப் பொந்திலிருந்து நோக்கியதாக அபிஷேக நாடகமும்
பேசும். கவிச்சக்கரவர்த்தி, இருவர் கருத்தும் பகையாதபடி பொதும்பர் என்னும்
பொதுச் சொல்லாற் பேசினார்.                               (77)