5170. | ஈசற்குஆயினும் ஈடு அழிவுற்று, இறை வாசிப்பாடு அழியாத மனத்தினான், ஆசைப்பாடும் அந்நாணும் அடர்த்திட, கூசிக் கூசி,இனையன கூறினான்; |
ஈசற்கு ஆயினும் -(எதிர்வருபவன்) சிவபிரான் ஆனாலும் (அவனுக்கும்); ஈடு அழிவுற்று - வலிமை அழிந்து; இறை - சிறிதும்; வாசிப்பாடு அழியாத - பெருமிதம் குன்றாத; மனத்தினான் - உள்ளத்தை உடைய இராவணன்; ஆசைப்பாடும் - ஆசையும்; அந்நாணும் - அந்த நாணமும்; அடர்த்திட - வருத்திட (அதனால்); கூசிக் கூசி - கூசிக் குறுகி; இனையன - இப்படிப்பட்ட மொழிகளை; கூறினான் - சொன்னான். ஈடு - வலிமை.வாசிப்பாடு - பெருமிதம். கூசுதல் - வெட்கம் சுருக்கம் என்னும் பொருளில் வந்தன. கண் சுருங்குதலை, சுடர்கண்டு கண் கூசிற்று என்பதால் அறிக. அந்நாண் - உளம் அறிசுட்டு (102) |