5191. | ' "மலை எடுத்து, எண் திசை காக்கும் மாக்களை நிலைகெடுத்தேன்" எனும் மாற்றம் நேரும் நீ, சிலை எடுத்துஇளையவன் நிற்கச் சேர்ந்திலை; தலை எடுத்து,இன்னமும், மகளிர்த் தாழ்தியோ ? |
மலை எடுத்து -கயிலாயமலையைப் பெயர்த்து; எண்திசை காக்கும் மாக்களை - எட்டுத் திக்குகளையும் காக்கும் யானைகளின்; 'நிலை கெடுத்தேன்' - உறுதிப் பாட்டை அழித்தேன்; எனும் மாற்றம் - என்கின்ற மொழியை; நேரும் நீ - கூறிக் கொண்டுள்ள நீ; இளையவன் - இலக்குவன்; சிலை எடுத்து நிற்க - வில் பற்றி என்னைப் பாதுகாத்து நிற்க (அப்போது); சேர்ந்திலை - வரவில்லை; தலை எடுத்து - தலைகளைச் சுமந்து; இன்னமும்- மேலும்; மகளிர்த் தாழ்தியோ - பெண்களைக் கும்பிடுகிறாயா? மாக்களை - என்பதில் உள்ள 'ஐ' அசை. யானைகளை நிலை கெடுத்தல் என்று நேரே பொருள் கூறினும் பொருந்தும். நேரும் நீ - பேசும் நீ - நேர்தல் - பேசுதல். சீர் சடகோபன் நேர்தல் ஆயிரத்து (திருவாய் 1 - 8 -11) மகளிர்த் தாழ்தியோ - மகளிரால் இழிவுறுவையோ என்றும் கூறலாம். மாக்கள் - வீரர்கள் என்றும் கூறலாம். மகளிர்த் தாழ்தியோ; பெயரை ஒட்டிய ஒற்று (த்) பெயரை வேறுபடுத்தும் வேற்றுமையின் பணியைப் புரிகிறது. ஒற்றும் வேற்றுமை உருபாம் பெயர்ப்பின். இது உரைச் சூத்திரம். (123) |